40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் ( 2025 – 26 )கடந்த 1 ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நியமன செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன் விவரம்:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாட வேளைகளும் இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 28 பாட வேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோல் பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப்பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறித்தியுள்ளது.
அதேபோல் பணி நிர்ணயம் செய்யும்போது மொழிப்பாடத்தில் 24 பாட வேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாட வேளைக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியர் கூடுதலாக நிர்ணயம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது தவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அதில் பணியாற்றுபவர்களில் இளையோரை ( Junior ) உபரியாக காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது












