டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வாணையத்தின் தேர்வு அட்டவணை பகுதியில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு நடைபெற்ற அன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி 3 மாதத்தில் முடிவுகள் வெளிவர இருப்பதும், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தேர்வில் குழறுபடி மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தேர்வு நடைபெற்ற 3 மாதங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது












