அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் மகளை சேர்த்த நீதிபதி

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் மகளை சேர்த்த நீதிபதி

சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி,  தனது மகளை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளார்.

தென்காசி மாவட்டம்,  சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயபாரதி, சிவகாசி சார்பு நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினி யாளை (7) சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை வரவேற்றனர். நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த காலத்தில் வருமானத்தை மிஞ்சி கடனை வாங்கி தனியார் பள்ளியில் படிப்பது தான் பெருமை என்று நினைத்து தனது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பவர்கள் மத்தியில் நீதிபதியின் இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.