பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு: 600-க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாஞ்சலி

                            பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு: 600-க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாஞ்சலி

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது.  இந்த தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தன. மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9ந்தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாக மே 8 ம் வெளியிடப்பட்டது.

தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.

தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல் தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599-மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ், பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில தலா 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று 599 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மாணவி ஓவியாஞ்சலியை பள்ளிச் செயலர் குப்புசாமி, நிர்வாக அலுவலர் சிவக்குமார், முதல்வர் கதிரவன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

மாணவி ஓவியாஞ்சலிபழநி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் – சாந்தி தம்பதியின் மகள் ஆவார். இவரது தந்தை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கணக்காளராகவும், தாய் பழநி ஒன்றிய அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர்.

வங்கி அதிகாரியாவதே தனது ஆசை என்றார் ஓவியாஞ்சலி. முதல் மதிப்பெண் பெற்ற ஓவியாஞ்சலியிடம் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் செல்போன் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.