தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி :
மேயர், ஜெகன் பெரியசாமி, எம்பவர் சங்கர் பங்கேற்பு
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் மனித உரிமைகள் தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். மேலும் தேசிய உரிமைகள் தின கருப்பொருளான ‘நிலையான வாழ்க்கை முறைக்கான ஒரு எளிய மாற்றம்’ என்ற போஸ்டரை வெளியிட்டார்.
அப்போது சிறப்புரையாற்றிய மேயர் “பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம். நுகர்வோர் அனைவரும் விழிப்புடன் இருந்து சேவைகளைப் பெற வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான சங்கர் பேசும்போது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ன் சிறப்பம்சங்கள் குறித்தும், நுகர்வோருக்கு பில்லே ஆயதம் என்பதால் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பில்லை கேட்டுப் பெற வேண்டும். நாம் பெற்ற சேவைகளிலோ அல்லது பொருட்களின் தரத்திலோ ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நாட வேண்டும். நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. நாம் தொடுக்கும் வழக்கிற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம் என்ற விழிப்புணர்வு தகவலை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் உஷா மாணவர்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு பொருட்களையோ, சேவைகளையோ பெறும் போது அவசியம் ரசீது கேட்டுப் பெற வேண்டுமென கருத்துரையாற்றினார்.
பாரத் எரிவாயு பிளான்ட் மேலாளர் சந்தோஷ்குமார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி, என்ன வழிகளில் எல்.பி.ஜியை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விளக்கமளித்தார்.
முன்னதாக அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரையாற்றினார். எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுதா குமாரி மற்றும் எம்பவர் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் வில்மார்ட் தீபக் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.












