தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு; பாட வாரியான தேர்வுகள் ஆவரேஜ் அளவில் இருந்ததாக தேர்வர்கள் கருத்து

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு;
பாட வாரியான தேர்வுகள் ஆவரேஜ் அளவில் இருந்ததாக தேர்வர்கள் கருத்து

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 10 ல் வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்கும் வகையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தினார். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிவு செய்தது.

அதன்படி, இன்று அக்டோபர் 12 ஆம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் தகுதித் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்தது. அனைவரும் தகுதி பெற்று விடும் அளவிலே கேள்விகள் இருந்தன. தமிழ் பாடத் தேர்வை பொறுத்தவரை, தகுதித் தேர்வை போலவே ஆவரேஜ் அளவில் இருந்தது. தமிழில் நிறைய நேரடி கேள்விகள் இருந்தன. ஆங்கில பாடப் பகுதி எளிதாக, நேரடியான கேள்விகளுடன் இருந்தது.

வணிகவியல் பாடம் ஆவரேஜ் அளவில் இருந்தது. இதில் கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு தொடர்பான வினாக்கள் எளிதாக இருந்தன. பொருளாதாரம் பாடத்தில் முந்தைய ஆண்டு வினாக்கள் கணிசமான அளவில் இடம்பெற்றிருந்தன. பொருளாதாரம் சற்று எளிதாகவே இருந்தது. இதிலும் கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு தொடர்பான வினாக்கள் எளிதாக இருந்தன.

வேதியியல் பாடம் ஆவரேஜ் அளவில் இருந்தது. நேரடி கேள்விகள் குறைவாகவே இருந்தன. இயற்பியல் பாடம் சற்று கடினமாக இருந்தது. கணினி அறிவியல் பாடம் எளிதாக இருந்தது. இதில் கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு தொடர்பான வினாக்கள் எளிதாக இருந்தன.

இந்தநிலையில், வேலூரை சேர்ந்தவர் வணிகவியல் பாடத்திற்கு விண்ணப்பம் செய்த நிலையில் மொழிப்பாடத்திற்கான வினாத்தாள் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

தேர்வர் விண்ணப்பித்த பாடத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மொழித்தாள் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்தது தேர்வரின் தவறு என வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.