பி.எட் மாணவர் சேர்க்கை: இணைய வழியிலேயே கல்லூரியை தேர்வு செய்யலாம் அமைச்சர் – கோவி.செழியன் தகவல்
வருகிற 9 ம் தேதி வரை இணைய வழியில் மாணவர்கள் தாங்கள் விருப்பும் கல்லூரியை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல்( பி. எட். ) கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விருப்பப் பாடங்கள் மற்றும் கல்லூரியை இணைய வழியில் மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :
கடந்த ஆண்டுகளில் பி. எட். மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வு மூலம் நடைபெற்று வந்தது.இதனால் வெளி ஊர்களிலிருந்து மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது.

இந்த சிரமங்களை போக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி விண்ணப்பங்கள் 20 – 6 – 2025 முதல் 21 – 7 – 2025 வரை இணையவழியில் பெறப்பட்டன. 557 – ஆண்கள், 2,983 – பெண்கள் மற்றும் 5 – மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,545 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பின்னர் 31 – 7 – 2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன.
இணைய வழியில் 4.8.2025 பிற்பகல் 1.00 மணி முதல் 09 – 08 – 2025 மாலை 5. 00 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் உள்நுழைவு ஐடி ( ID ) மூலம் www.1wiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியை தேர்வு செய்யலாம் இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.












