தமிழக அரசின் புதிய திட்டம் :
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி பயில ஆண்டுக்கு ரூ.36 லட்சம் நிதியுதவி !
அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுகலை (Postgraduate) படிப்பைத் தொடர உதவும் வகையில், ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் பி.சங்கர் வெளியிட்டு உள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு :
இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 50 மாணவர்களுக்குச் செலவிட ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வீதம், அதிகபட்சமாக 1 முதல் 2 ஆண்டுகள் வரை நிதியுதவி வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
6 முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அரசுப் பள்ளிகளில் படித்து, இளங்கலைப் பட்டம் (UG) பெற்றிருக்க வேண்டும் அல்லது 6 முதல் 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக தகுதி:
QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் (QS World University Rankings) முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில், முழுநேர முதுகலை படிப்பில் (Full-time on-campus Master’s level) சேர்ந்திருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு மற்றும் பிரிவுகள்: மொத்தம் தேர்வு செய்யப்படும் 50 மாணவர்களுக்கு பொறியியல் பிரிவு (Engineering) 25, கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவு (Arts, Science, Humanities) 25 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் மொத்த மாணவர்களில் 33% மாணவிகளுக்கு (பெண்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான தகுதிகள், வருமான வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை https://dte.tn.gov.in/index.php/Homepage/all-annocement என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்












