TNPSC Group 4 Results 2025:
ரிசல்ட் வெளியாகும் நேரத்தில் கூடுதலாக 727 இடங்கள்
குரூப்-4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 662ஆக அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜுலை 12-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் என 3 ஆயிரத்து 935 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர். வெற்றி வாய்ப்பு விகிதம் (Selection Rate) என்பது 0.35% ஆகும். அதாவது, 1,000 பேரில் குறைந்தது 3.5 பேர் மட்டும்தான் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2 பகுதிகளாக நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முதல்பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
2-ம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 3,935 காலி பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், 727 பணியிடங்களும் சேர்த்து 4 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது.
கலந்தாய்வுக்கு முன் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












