கடந்த ஆண்டு பிளஸ் 1ல் பெயிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை
‘கடந்த கல்வியாண்டுகளில், ‘பிளஸ் 1′ பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 2017 – 18ம் கல்வியாண்டில் இருந்து, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 – 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 8 லட்சத்து 7,098 மாணவ, மாணவியர் எழுதினர்.

துணைத்தேர்வு தேர்வு எழுதியவர்களில், 7.43 லட்சம் பேர், அதாவது, 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 63,866 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு, கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள், 31 ல் வெளியானது.
தற்போது, தமிழக அரசு சார்பில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.
பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. இந்த நடைமுறை இந்த கல்வியாண்டே அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டுகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறா மல் உள்ளனர். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்த நிலையில்,
இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநில கல்விக் கொள்கை அடிப்படையில், இந்த கல்வியாண்டு ( 2025 – 2026 )முதல், ‘பிளஸ் 1’ மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 தேர்வெழுதி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள், பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணையாக வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.












