TNEA 2025: இன்ஜினியரிங் கவுன்சலிங்: பொறியியல் மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆன்லைனில் வெளியீடு

TNEA 2025: இன்ஜினியரிங் கவுன்சலிங்:
பொறியியல் மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆன்லைனில் வெளியீடு

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான 10 இலக்க ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்கலைக்கழக துறைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. இந்த இடங்களின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்தக் கலந்தாய்வில் கலந்துக் கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மற்றும் பி.டெக் ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 6ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலம் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு (ஜூன் 11) ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான தரவரிசையை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.

ரேண்டம் எண்ணில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ரேண்டம் எண் தெரிந்துக்கொள்ள tneaonline.org என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழைந்து பார்த்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், இணைய வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியுள்ளது. இது ஜூன் 11 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறும். ஜூன் 27 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.