கால்நடை மருத்துவ ( Veterinary Medicine ) படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ ( Veterinary Medicine ) படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு + 2 தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

பிவிஎஸ்சி ( BVSC ) – ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் 20-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த படிப்புகளுக்கு + 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் பிவிஎஸ்சி ( BVSC ) படிப்பில் 45 இடங்கள், பிடெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் – 3, பால்வள தொழில்நுட்பம் – 2, கோழியின தொழில்நுட்பம் – 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.