நாளை ஆசிரியர் தினம்: 389 ஆசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட இருக்கிறது : விருதுகளை வழங்குகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் !

நாளை ஆசிரியர் தினம்:
389 ஆசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட இருக்கிறது :
விருதுகளை வழங்குகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் !


நாளை செப்டம்பர் 05 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார்.

தமிழக அரசு சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது அவரது பிறந்த நாளான செப்டம்பர் 05 ல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா நாளை (5-ந்தேதி) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.விழாவிற்கு பள்ளிக்கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வி இயக்குனர் லதா வரவேற்கிறார்.

விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார்.

இந்த ஆண்டு 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. முடிவில் தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் நன்றி கூறுகிறார்.

விழாவில் மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, மாநிலத் திட்ட இயக்குனர் கலைச்செல்வி, சென்னை ஆட்சியர் மாலதி ஹெலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

தேசிய அளவில் நல்லாசிரியர் விருது :

தேசிய அளவில் மொத்தம் 82 ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது (National Teachers’ Awards 2026) வழங்கப்பட உள்ளது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்குகிறார்.

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 82 விருதுகளின் முழு விவரம்:

பள்ளி ஆசிரியர்கள் – 48 நபர்கள் (இதில் 26 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் அடங்குவர்). தமிழ்நாட்டிலிருந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உயர்கல்வி ஆசிரியர்கள் (Higher Education): 21 நபர்கள்.திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoSDE) கீழ் உள்ள ஆசிரியர்கள்: 13 நபர்கள்.