நீட் மறுதேர்வு தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை ( NTA ) :
ஜீன் 21 ம் தேதி நடைபெறும்!
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடக்கின்றன, நீட் தேர்வால் மாணவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர் என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் பல கட்டுப்பாடுகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழலிலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன. அண்மையில் அதாவது மே 3-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள்.
தேர்வுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது. இதனை அடுத்து தேசிய தேர்வு முகமை (NTA), அது போலியான வினாத்தாள் எனவும், இதனை மாணவர்கள் பயன்படுத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்னரே நீட் வினாத்தாள் கசிந்தது வெளிச்சத்துக்கு வந்தது. கைகளால் எழுத்தப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட வினாத்தாள் அப்படியே நீட் தேர்வு வினாத்தாளை ஒத்து போயிருந்தது. இதனை அடுத்து நீட் வினாத்தாள் கசிந்து விட்டது என கூறி திடீரென தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை. வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. Also Read பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு டிரெய்லர் தான்!! இனி என்னென்ன பொருட்கள் விலை ஏறும் தெரியுமா? திடீரென நீட் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் மறு தேர்வு நடத்துவதற்கான உத்தரவை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் மறு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தேர்வுக்கு முன்பாக நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்வையிடலாம்.
மாணவர்கள் இந்த மறுதேர்வில் பங்கேற்க புதிதாக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இருந்தாலும் மீண்டும் நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை தந்துள்ளது. சிலரின் தவறால் பலர் வேதனைப்படும் நிலை உண்டாகி இருக்கிறது. இருந்தாலும் கடந்த தேர்வில் சரியாக எழுதாத மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.












