பெற்றோரை இழந்த 6,082 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 – ‘அன்புக்கரங்கள்’ திட்டம் :
தொடங்கி வைத்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின்
குடும்ப சூழ்நிலை காரணமாக யாரும் கல்வியறிவு பெறுவதை தவறவிட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்,6,082 குழந்தைகள் பயன்பெறும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
எங்களுடைய அடிப்படையே, பதவி அல்ல பொறுப்பு தான்!

அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. இன்றைக்கு, தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக்கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம்.
காலையில் பள்ளிக்கு பசியுடன் வரும் குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினோம். இன்றைக்கு, 21 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான காலை உணவை பரிமாறுகிறோம்.
அந்த அடிப்படையில் உருவானது தான், இந்த அன்புக்கரங்கள் திட்டம்! இந்தத் திட்டத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களிடம் சொல்லி, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் கைவிடப்பட்ட குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருப்பவரின் குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், அவர்களுடைய குழந்தைகள் – பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அவர்களுடைய குழந்தைகளை கணக்கெடுக்கச் சொன்னோம். அப்படி முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கும், பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் இனிமேல் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம்! உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்! நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி வர வேண்டும்! இதுதான் என்னுடைய விருப்பம். எங்களுடைய லட்சியம்! இந்த லட்சியத்துக்கு துணையாகும் நம்முடைய திராவிட மாடல் அரசின் கரம் தான், அன்புக்கரம்! நாளைக்கு நீங்கள் படித்து, டாக்டராக – என்ஜினியராக – சயிண்டிஸ்டாக – ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக – அரசியல்வாதியாக உயர்ந்து, இந்தச் சமூகத்துக்கு, இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்! உங்களுடைய வெற்றி, தமிழ்நாட்டின் ஹிஸ்ட்டரியை சொல்ல வேண்டும்! அதற்கு உங்களுக்கு சப்போர்ட்டாக, உங்கள் ஃபிரண்டாக, உங்கள் பேரண்ட்டாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் முதல்வர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைஅமைச்சர் கீதா ஜீவன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












