பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவிப்பு !
பிளஸ்-2 முடித்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-27-ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் (Diploma in Co-operative Management) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். குறைந்தபட்சம் 17 வயதுபூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

ஆன்லைனில் மட்டும்..
தகுதியுடைய நபர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ தபால் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
வகுப்புகள் ஆகஸ்ட் – 3 ல்தொடக்கம் :
பயிற்சிக்காலம் 1 வருடம். 2 செமஸ்டர்களை உள்ளடக்கியது. பயிற்சிக் கட்டணம் ரூ.20,750. புதிய பாடத்திட்டத்தின் படி பாடங்கள் தமிழ்வழியில் மட்டும் நடத்தப்படும். வகுப்புகள் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும்.
கூடுதல் விவங்களுக்கு 90427-17766 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு :
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர் பதவியிலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளில் சேரவும் ஆவின் நிறுனத்தில் நிர்வாகி பணியிடத்தில் சேரவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.












